இளன் கதை – 4
The Story of King Ila – 4
இவ்வாறு ஒரு வருடம் கடந்த பிறகு, இளை ஆண் உருவத்தை அடைந்த பிறகு, மஹா ஞானியான புதன், இளன் நிரந்தரமாக ஆண் உருவம் பெறுவதற்கான வழிகளைச் சிந்திக்கலானார். இதற்கு உதவுவதற்காக ஸம்வர்த்தர், ச்யவனர், அரிஷ்டநேமி, ப்ரமேதனர், மௌத்கலர், துர்வாஸர் ஆகிய பெரும் முனிவர்களை அவரிடத்துக்கு வருவித்தார்.
அவர்களிடம், “இந்த அரசன் கர்த்தம ப்ரஜாபதியின் புதல்வனான இளன். தங்கள் தவவலிமையால் இவனுடைய நிலைமையைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். இவனுடைய சாபம் நீங்கி இவனுக்கு நலம் உண்டாக என்ன செய்யலாம் என்பதைத் தாங்களே கூற வேண்டும்”, என்று கோரினார்.
அந்த பிரம்ம ஞானிகளும் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே தவவலிமையால் உயர்ந்த மேலும் பல முனிவர்களான கர்த்தமர், புலஸ்த்யர், க்ரது, வஷட்காரம், ஓங்காரம் முதலியவர்களும் அந்த ஆஸ்ரமத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
இப்படிப் பட்ட மஹாமுனிவர்கள் ஓரிடத்தில் சந்தித்ததால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இளனுக்குப் பரம மங்களத்தைச் செய்ய நிச்சயித்து தங்கள் தங்கள் அபிப்ராயங்களைக் கூறலானார்கள்.
அப்போது கர்த்தமர், “பிராம்மணோத்தமர்களே! இளனுக்குப் பரம சிரேயஸைக் கொடுக்கும் உபாயம் ஒன்றே. ரிஷபக் கொடியோனான ஸ்ரீ மஹாதேவரால்தான் இவனுக்குச் சாபம் நேர்ந்தது. அவரால்தான் இதை நீக்கவும் முடியும். அஸ்வமேத யாகம் செய்து அவரைத் துதிப்போம். அதைக் காட்டிலும் அவருக்குப் பிரியமான விஷயம் வேறு எதுவும் இல்லை. ஆகையால் அந்த யாகத்தை நாம் செய்வோம்”, என்றார்.
மற்ற ரிஷிகள் அதற்குச் சம்மதிக்க, ஸம்வர்த்தருடைய சீடரான மருத்தர் யாகத்திற்கு தேவையான பொருட்களைச் சேகரித்து சித்தம் செய்தார்.
பிறகு புதனுடைய ஆஸ்ரமத்திற்கு அருகிலேயே அந்த மஹா யாகத்தை விதிப்படி நடத்தினார்கள்.
முடிவில் ஸ்ரீ ருத்ரன் பரம மகிழ்ச்சியடைந்து அவர்களிடத்தே தோன்றி, அந்த பிராமணர்களை நோக்கி, “இந்த அஸ்வமேத யாகத்தாலும், உங்களுடைய பக்தியாலும் நான் விசேஷ ஸந்தோஷத்தை அடைந்தேன். இந்த அரசனுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினார்.
அந்த ரிஷிகளும் பரம பக்தியுடன் ஸ்ரீ மஹாதேவரை வணங்கித் துதித்து, “ஸ்வாமி! இந்த அரசன் முன்போல் நிரந்தரமாக ஆணாக மாறத் தாங்கள் அருள வேண்டும்”, என்று பிரார்த்தித்தார்கள்.
ஸ்ரீ சங்கரனும், “அவ்வாறே ஆகட்டும்”, என்று அருளி மறைந்தார்.
பிரம்மஞானிகள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியுடன் தங்களிருப்பிடங்களுக்குத் திரும்பினார்கள்.
இளன் புதபகவானை வணங்கி விடைபெற்று தன்னுடைய பழைய நாடான பாஹ்லீக தேசத்தை விட்டுவிட்டு மத்திய தேசத்தில் பிரதிஷ்டானம் என்ற புதிய நகரத்தை நிர்மாணித்து அதனைத் தன் தலைநகரமாக ஆக்கிக் கொண்டு பலகாலம் நல்லாட்சி புரிந்தான்.
காலக்கிரமத்தில் அவன் பிரம்ம லோகத்தை அடைந்தபிறகு அவனுடைய புதல்வன் புரூரவஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்று பலகாலங்கள் தன்னுடைய குடிமக்களுக்கு அற்புதமான ஆட்சியை அளித்தான்.
அஸ்வமேத யாகத்தின் மஹா மஹிமையைக் கூறும் இந்தக் கதையை ஸ்ரீ ராமபிரான் தன்னுடைய இளைய சகோதரர்களுக்கு உபதேசித்தார். இதனைப் படிப்பவர்களும் கேட்பவர்களும், ஸ்ரீ சந்திர பகவான், ஸ்ரீ புத பகவான், ஸ்ரீ ராமபிரான் மற்றும் ஸ்ரீ மஹாதேவர் இவர்களின் நல்லருளோடு மஹாமுனிவர்களின் நல்லாசிகளையும் பெறுவார்கள்.
பாரத தேசத்தின் வடமேற்குப் பிரதேசமே (தற்போதைய பஞ்சாப் மாநிலப் பிரதேசமாக இருக்கலாம்) பாஹ்லீக தேசமாக இருந்ததாகக் கருதப் படுகிறது. குரு வம்சத்தைச் சேர்ந்த சாந்தனு மஹாராஜனின் சகோதரன் இந்தப் பகுதியை ஆண்டதாகவும் இதிஹாச புராணங்களில் கூறப் பட்டிருக்கிறது.
பிரதிஷ்டானம் தற்போதைய மஹாராஷ்டிர மாநிலத்தில், ஔரங்காபாதிலிருந்து 56 கி.மீ. தொலைவில் கோதாவரி நதிக் கரையில் பைதான் (Paithan) என்ற பெயருடன் இப்போதும் விளங்குகிறது!
பிரதிஷ்டானபுரம் என்ற பெயரில் பிந்நாட்களில் முதல் சாதவாஹன அரசனின் தலைநகரமாகத் திகழ்ந்தது இந்நகரம். இவ்விடத்திலிருந்து சாதவாஹனர்கள் கிட்டத்தட்ட இந்தியாவின் பாதிபாகத்தை ஆண்டார்கள்!
மஹாராஷ்டிரத்தின் உயர்ந்த தவசீலரான ஏகநாதர் இந்நகரத்தைச் சேர்ந்தவரே!